நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான்.
கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். பல பெண்கள் காதலை அவனிடம் சொல்லிய போது திட்டு வாங்கியே சென்றார்கள்.
அப்போது அதே கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டில் சேர்ந்தாள் கௌசல்யா. சுட்டிப்பெண். பல ஆண்கள் அவள் பின்னால் காதல் வலையுடன் சுற்றினார்கள்.ஆனால் அவளின் மனதை கொள்ளை கொண்டவன் ஹரி.
ஹரியை தொடர்ந்து ரசித்தவளோ கொஞ்ச நாளுக்கு பிறகு அவனை ரசிக்க வைத்தாள். அவளின் செய்கையிலும் குழந்தை போன்ற விளையாட்டுகளாலும் மெல்ல மெல்ல அவளின் மீது காதலையும் கொண்டான்.
காதலர் தினம்…
கையில் ரோஜாவுடன் அவளிடம் காதலை சொன்னவனுக்கு பதிலாய் கிடைத்தது ஆசை முத்தம் கையில்.இந்த காதல் ஜோடி பேசிய சில வார்த்தைகள் இங்கு கவிதையாய்….
( வாருங்கள் காதலை ரசிப்போம்)
ஹரி:
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்….
உறைபனி மீது
ஒளிர்ந்திடும் சூரியன் போல்
எந்தன் மனமும்
உந்தன் பார்வையில்
கரைந்தே போகிறதடி
சேவல் தொண்டை குரலினிலே
சுற்றம் அதிர பேசியவனை
காதருகே அலைபேசியில்
கிசுகிசுக்க வைத்தாயே
மீசையை முறுக்கி
நெஞ்சை நிமிர்த்தி
எட்டிவைத்த கால்களெல்லாம்
குட்டி சுவரோடு ஒதுங்கி
தனிமையினை தேடி
இருட்டில் ஓடுதடி…
தலைமுடி பறக்க
வண்டியில் சென்றவன்
நண்பனின் முதுகு பின்னால்
முனகிக்கொண்டு வருகிறேனே
வீரவசனம் பேசி
திமிறிய காளையனோ
வெட்கத்தில் தலை குனிந்து
சிரிப்போடு நடக்கிறேனடி
பெண்ணை…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…!!!
கௌசல்யா:
கண்களின் சிமிட்டலில்
கனவுகளில் நுழைந்தவனே
இதயத்தை திருடி
இரவுகளை எடுத்தாயே
தனியறை புகுந்தநாள் முதல்
தனிமையை வெறுத்தவளை
தன்னந்தனிமையிலே பலநேரம்
தலையணையோடு பேச வைத்தாயே
கண்ணாடி பிம்பத்தில்
கணப்பொழுதில் தோன்றி மறைய
கன்னங்கள் சிவந்ததடா
பெண்மையின் வெட்கத்தில்
நிழல்போல உனை தொடர்ந்த
நினைவுகள் விதைத்தேனே
மறுபொழுது எண்ணத்தில்
உன்னிதயம் எடுத்தேனே
என்செய்கை நீ விரும்ப
உனக்காக தொடர்நதேனே
கவிப்பாடும் காதலதனை
உன் மார்பில் சாய்ந்தேனே
ஆசையிலே பல கடிதம்
காற்றலைகளிலே கொடுத்திடவே
விழிவழியே காதலும்
நம் மொழியில் சேர்ந்ததடா…
அன்பே…
மொழியற்ற பார்வையிலே
உன் மனதை திருடிடவே
உனக்கான உன்னவளாய்
உனக்குள் தானே நானிருந்தேன்…
- சேதுபதி விசுவநாதன்