கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவர் சித்தார்த்தின் முகத்தை தான்.
சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில் உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டது அவளுக்கு .
அவன் நெற்றியில் வழிந்த வியர்வை தன் முகத்தில் பட்டதாலே தான் விழித்திருக்கிறோம் என்ற உண்மை புரிய என்ன பேசுவது என்று கூட புரியாமல் பிரமை படித்தவள் போல படுத்திருந்தவள் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“குட் மார்னிங் பொண்டாட்டி …என்ன காலைல அஞ்சு மணிக்கு எழுந்திட்ட” என்று சாதாரணம் போல கேட்டாலும் அவனது கண்களும் இறுக்க மூடிய உதடுகளின் ஓரத்தில் வெளியே தெரியாத சிரிப்பும் அவனின் கள்ளத்தனத்தை காட்டிக் கொடுத்து விட்டது.
பதில் பேசாமல் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா.
“நீயும் வாயேன்… இரண்டு பேரும் சேர்ந்து தண்டால் எடுக்கலாம்” என்று சொன்னவனின் விழிகளில் இருந்த அசாத்திய பளபளப்பில் அரண்டு போனவள் வேகமாக எழ முயன்றாள்.
அதன் பின்னரே அவன் மனது வைக்காமல் தான் அசையக் கூட முடியாது என்று புரிய பாவமாக அவனைப் பார்த்தாள்.
‘அடேய்… கடோத்கஜா… பீமசேனா… எழும்பித் தொலை டா’
“முடியாது பொண்டாட்டி”அவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.
‘சத்தமா எதுவும் சொல்லிட்டோமா’
“ஹா ஹா… எங்கே உன் புருசனுக்கு நேத்து நான் சொல்லித் தந்த மாதிரி குட் மார்னிங் சொல்லு பார்ப்போம்” என்று சொன்னவன் தண்டால் எடுப்பதை நிறுத்தி விட்டு கைகளை அவளின் இருபுறமும் ஊணி அவளது முகத்தை கண்களால் மேய்ந்தான்.
‘ஆத்தி… மறுபடியும் முதல்ல இருந்தா’ என்று எண்ணியவளுக்கு நேற்றைய தினம் நடந்ததை எண்ணி உடலில் நடுக்கம் பரவ…அதற்கு மேல் தாங்காது மெல்ல தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசி விட்டாள்.
“வ…வழி விடுங்க… நான் போகணும்” குரல் கிச்சு கிச்சு மூட்டியது அவளுக்கு.
“நேத்து உன்னை பெட்டில் தானே படுக்க சொல்லிட்டு போனேன். ஏன் கீழே வந்து தூங்கின?” அவன் பார்வை அவளது கண் வழியே அவளது உள்ளத்தை ஊடுருவியது.அதன் வேகம் தாளாமல் நடுக்கத்துடன் பார்வையை திருப்பிக் கொண்டாள் சீதா.
அவளது முகத்தை மீண்டும் தன் பக்கமாய் திருப்பியவனின் முகம் ஊர் எல்லையில் இருக்கும் அய்யனாரை நினைவுறுத்த… பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது சீதாவுக்கு.