
அத்தியாயம் 1
அங்காலி பங்காளி வா
இனி ஆட்டந்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்டம் போல
இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி..
எ அடிச்சு தூக்கு
அடிச்சு தூக்கு
“டேய்! எவன்டா அது மைக் செட்க்காரன்… இந்த பாட்டெல்லாம் எதுவும் வேண்டாம்… நிறுத்துடா…” என்று மொத்த ஊருக்கும் கேட்கும் அளவிற்கு உச்சஸ்தாயில் கத்தத் தொடங்கினார் துரைசாமி.
“நான் தான் அப்பா போட சொன்னேன்” என்று சொன்னபடி கண் எதிரில் பவ்யமாக வந்து நின்ற தனது மகன் சத்யனை முறைத்துப் பார்த்தார் அவர்.
“இப்போ எதுக்கு இப்படி பாட்டும் , கூத்தும் ஏற்பாடு செஞ்சு இருக்க?” கோபம் குறையாமல் மீசை நுனியை திருகி விட்டுக் கொண்டவரை நேருக்கு நேராக பார்த்து பேசினான் சத்யன்.
“தங்கச்சியும், மாப்பிள்ளையும் கல்யாணம் முடிஞ்ச பிறகு நம்ம வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்கு வர்றாங்க… அவங்களை நல்லா படியா வரவேற்கணும்ன்னு அம்மா சொல்லி இருக்காங்க.. ஒரு சின்ன குறை கூட இல்லாம பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடையும் செஞ்சு வச்சுட்டு இருக்கேன்.”
“என்கிட்டே ஒரு வார்த்தை கலந்து பேசாம எப்படி இதெல்லாம் செய்யலாம்? இது ரொம்ப அவசியமா இப்போ” என்று எரிந்து விழுந்தார் துரைசாமி.
அவரின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பல வருடங்களாக அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மகள் பரதத்தை அரங்கேற்றம் செய்து விட்டாள். வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட வேண்டும் என்று நினைத்த மனைவியை தன்னை மீறி சென்று மகளின் செயலுக்கு உறுதுணையாக இருந்து விட்டாரே… இது இரண்டிற்கும் துணையாக இருந்த அபிமன்யுவையே அவரின் கண் முன்னாலேயே திருமணமும் செய்து கொண்டாளே… துரைசாமியை பொறுத்தவரை இது எல்லாமே அவருக்கு விருப்பம் இல்லாதது தானே.
மனைவியின் ஆசைப்படி மகள் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்யவும் கூடாது… அதற்கு உதவியாக இருந்த அபிமன்யுவும் அவனது காதல் கை கூடாமல் போனதை எண்ணி வாழ்நாள் முழுக்க வருந்த வேண்டும் என்று நினைத்தல்லவா மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்தார்.
அதிலும் அவருக்கு தோல்வி தானே கிடைத்தது. மொத்த குடும்பமும் அந்த அஞ்சலியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அவரையே ஏமாற்றி அல்லவா அந்த திருமணத்தை நடத்தினார்கள்.
விடிந்தால் திருமணம் எனும் நிலையில் தானே அவருக்கு மாப்பிள்ளை அபிமன்யு என்பதே தெரிந்தது.
மொத்த குடும்பமும் அந்த அஞ்சலியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றி செய்த அந்த கல்யாணத்தை அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
“கண்டிப்பா அவசியம் தான்ப்பா… மாப்பிள்ளையும், தங்கச்சியும் இங்கே இருக்கும் நாளில் எல்லாம் வீடு திருவிழா மாதிரி இருக்கணும்னு அம்மா சொல்லி இருக்காங்க… பொண்ணோட அப்பாவா நீங்க தான் முன்னாடி நிற்கணும்.. பேசிக்கிட்டே நிற்காம போய் ஆக வேண்டியதைப் பாருங்க…” என்று அழுத்தமான குரலில் சொல்ல… துரைசாமிக்கு கோபம் வந்தது.
“இன்னமும் நான் தான்டா உனக்கு அப்பன்… எனக்கு உத்தரவு போடும் வேலை எல்லாம் வச்சுக்காதே… பெத்தவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டு அந்த கழுதை இங்கே வருவாளாம்… அவளை நான் வாசலில் இருந்து வரவேற்கணுமா?”
“அப்பா அநியாயமா பேசாதீங்க… நீங்க பார்த்து யாருக்கு நிச்சயம் செஞ்சீங்களோ அவரைத் தான் தங்கச்சி கல்யாணம் செஞ்சுகிட்டா.. அதுவும் நம்ம எல்லார் கண்ணுமுன்னாடியும் தான்… என்னவோ ஊரை விட்டு ஓடிப் போன மாதிரி இல்ல பேசறீங்க…”
“பேசுடா பேசு… என்னை ஏமாத்தி ஜெயிச்சுட்டதா எல்லாரும் ஆடுறீங்க இல்ல… எனக்கும் ஒருநாள் வரும்டா.. அன்னிக்கு என்னோட ஆட்டத்தை நான் ஆடுவேன்.. ஒரு பயலும் எதிரில் நிற்க முடியாது” என்று சொன்னவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய அறைக்குள் புகுந்து கதவை ஓங்கி அடித்து சாத்தினார்.
‘ஹம்… இவர் எப்போ தான் மாறுவாரோ’ என்று எண்ணியவன் அன்னையைத் தேடி சென்றான்.
மாம்பழ நிற பட்டுப்புடவையில் சிகப்பு கரையிட்டு… கோவிலில் வீற்றிருக்கும் அம்மன் தான் உயிர் பெற்று வந்து விட்டதோ என்று எண்ணும்படியாக தெய்வாம்சத்துடன் வீட்டுக்குள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடி மகளுக்காக எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தவரை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன்.
“என்னம்மா… பொண்ணு மறுவீட்டு விருந்துக்கு வர்றான்னு தெரிஞ்சதும் பையனை மறந்துட்டீங்க போலவே” தாயை வம்புக்கு இழுத்தான்.
“ஆஹா… நான் அவளுக்கு செய்யறேன்னு உனக்கு பொறாமையாக்கும்.. இதை நான் நம்பணுமா? தங்கச்சி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றதில் என்னை விட அதிக கவனம் எடுத்து செய்றவன் நீ தானே தம்பி… நீ அவளுக்கு அண்ணன் மாதிரியா நடந்துக்கிற… நீ சஹானாவுக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்க” என்று குரல் தழுதழுக்க பேசியவரை கண்டு நெகிழ்ந்து போய் நின்றான் சத்யநாதன்.
“அப்பா எங்கே சத்யா?” என்று கேட்டவரை பார்த்து புன்னகையுடன் பதில் சொன்னான்.
“உங்களுக்குத் தான் அவரைப் பத்தி தெரியுமே… அவருக்கு தன்னை மீறி இந்த கல்யாணம் நடந்ததை இன்னும் தாங்கிக்கவே முடியல… நம்ம எல்லார்கிட்டயும் தோத்து போயிட்டதா நினைச்சு பீல் பண்ணுறார்…” என்று உரைக்க… சில நொடிகள் அங்கே சங்கடமான மௌனம் நிலவியது.
“குடும்பத்தில் விட்டுக் கொடுத்தா தானே சந்தோசம் நிலைக்கும். என்கிட்டே தான் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டார்… இப்போ சஹானா கிட்டயுமா… அவரோட பொண்ணு தானே அவ… அவரோட ரத்தம் தானே… அவ கிட்ட கூட இப்படி போட்டி போடணுமா?”என்றார் வருத்தம் மேலிட…
“அவரோட ரத்தமாகவே இருந்தாலும் அவரை ஜெயிச்சது தப்புன்னு நினைக்கிறார்ம்மா…”
“எப்போ தான் மாறப் போறாரோ?”
“கூடிய சீக்கிரம் மாறிடுவார் மா…”
“எதை வச்சு சொல்ற?”
“எல்லாம் உங்க பொண்ணை வச்சுத் தான்… எண்ணி ஒரு வருசத்தில் அவ மட்டும் அவரை தாத்தா ஆக்கிட்டா… அதுக்கு அப்புறம் மனுஷன் ஒரு வழிக்கு வந்துடுவார்…”
“நிஜமாவா சொல்ற…”
“நம்பிக்கை… அதானே எல்லாம்” என்று குரல் மாற்றி பேச… கலகலத்து சிரித்தார் மேகலா.
இவர்கள் இருவரும் ஹாலில் இருந்து சிரித்து பேசுவதை எல்லாம் தன்னுடைய அறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த துரைசாமியின் மனதில் வஞ்சம் அதிகரித்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாவிட்டாலும் அவர்களின் மகிழ்ச்சி அவருக்கு எரிச்சலையே தந்தது.
அவர்களின் மகிழ்ச்சியின் அடிப்படை அவரது தோல்வி அல்லவா… அதை அழித்தாக வேண்டும் என்று உறுதி பூண்டார்.
‘வரட்டும்… என்னை தோற்கடிச்ச அந்த பாவியும்… நான் பெத்த அந்த மகராசியும் வரட்டும்… அவங்க சந்தோசத்தை அழிச்சு… அவங்களை ஜெயிச்சு காட்டுறேன்’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே வீடு பரபரப்பானது.
“பொண்ணும், மாப்பிள்ளையும் வந்தாச்சு… ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாங்க” என்ற மேகலாவின் குதூகலக் குரல் அவரது கோபத்தை அதிகரிக்கவே செய்தது.
அவரது அறைக்கதவை மேகலா வந்து தட்டினார்.
“என்னங்க … பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தாச்சு… நீங்க தானே முன்னாடி நிற்கணும்… வாங்க”
“….”
“என்னங்க… அவங்க மட்டும் இல்லை… ஊர்க்காரங்களும் தான் காத்திருக்கறாங்க…” என்று அழுத்தி சொல்ல.. அடுத்த நிமிடமே அறைக்கதவை திறந்து கொண்டு புன்னகை முகத்துடன் வெளியே வந்தார்.
ஏனெனில் அந்த ஊரைப் பொறுத்தவரை அவர் பெரிய மனிதராகவே இருக்க விரும்பினார். அவர்கள் யாரும் தன்னை குறை சொல்லும்படி நடந்து கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்… செயற்கையாக முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார்.
காதல் கணவன் அபிமன்யுவுடன் காரை விட்டு இறங்கிய விஷ்வசஹானாவின் முகம் முழுக்க பூரிப்பில் நிறைந்து இருந்தது. புது மஞ்சள் கயிறு கழுத்தில் மின்ன… புதுப் பெண்ணுக்கே உண்டான வெட்கத்துடனும், பொலிவுடனும் நின்ற மகளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை மேகலாவுக்கும், சத்யனுக்கும்.
மகளின் மகிழ்ச்சியான முகம் கூட துரைசாமியின் கோபத்தை தூண்டியதே தவிர அவர் மனதை கொஞ்சமும் குளிர்விக்கவில்லை.
சஹானாவின் கரங்களை விடாமல் இறுக பற்றி இருந்த அபிமன்யுவின் முகம் நொடிப் பொழுது கூட மனைவியைப் பிரியாமல் பார்வையாலேயே அவளை தழுவிக் கொண்டிருந்தான்.
“சேர்ந்து நில்லுடா பாப்பா…. ஆரத்தி எடுக்கணும்” என்று நெகிழ்ச்சியோடு சொன்ன மேகலா… உறவுப் பெண்களுடன் சேர்ந்து புதுமண தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்க… சஹானா அவன் காதில் குனிந்து கிசுகிசுத்தாள்.
“ஆரத்தி எடுத்தா… மாப்பிள்ளை தட்டில் பணம் போடணும்”
“இது என்னடி புதுவகையான வழிப்பறியா?”என்று கண்களில் சோகம் மின்ன கேட்டவனைக் கண்டு பொய்யாக முறைத்தாள் சஹானா.
அபிமன்யு அவளை காதலுடன் பார்த்துக் கொண்டே தன்னுடைய கையில் இருந்த தங்க மோதிரத்தை கழட்டி அதில் போட்டான்.
“என்ன மாப்பிள்ளை இது?” எல்லாரும் பதற… அபிமன்யு அழகாய் புன்னகைத்தான்.
“மனசு முழுக்க சந்தோஷத்தில் நிரம்பி வழியுது… யாரும் மறுத்து பேசாதீங்க ப்ளீஸ்… என்னோட சனாவை எனக்கு கொடுத்து இருக்கீங்க… அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஜஸ்ட் வெறும் உலோகம் தான்” என்று சொல்ல மேகலாவிற்கு மனம் ஒப்பவில்லை.
“இருந்தாலும் மாப்பிள்ளை… முதன்முதல்ல வீட்டுக்கு வரும் பொழுது உங்க கையில் இருக்கிறதை நீங்க கழட்டி கொடுக்கிறது…”என்று தயங்க…
“அத்தை ப்ளீஸ்… என்னோட சந்தோசத்துக்காக கொடுத்து இருக்கேன்… மறுத்து பேசாதீங்க” என்று சொல்ல மேகலா தயக்கத்துடன் சத்யனைப் பார்த்தார்.
தாயின் முகத்தில் இருந்தே அவரது எண்ணத்தை ஊகித்த சத்யன் கொஞ்சமும் யோசிக்காமல் தனது கையில் இருந்த வைர முகப்பு வைத்த செயினை கழட்டி சட்டென்று அபிமன்யுவின் கழுத்தில் போட… சுற்றி உள்ள எல்லாருமே வாய் பிளந்து வேடிக்கைப் பார்த்தார்கள்.
“மச்சான்…” என்று அவசரமாக அபிமன்யு அதை கழட்ட முற்பட… சத்யன் அவன் பேசிய அதே வசனத்தை பேசி அவனின் வாயை அடைத்தான்.
“மாப்பிள்ளை ப்ளீஸ்… என்னோட சந்தோசத்துக்காக கொடுத்து இருக்கேன்… மறுத்து பேசாதீங்க” என்று சொல்ல மேகலாவின் முகம் மலர்ந்தது.
அங்கே நடக்கும் அத்தனை காட்சியையும் கண்டு மனம் வெதும்பியபடி நின்ற துரைசாமி வெளியில் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொள்வதற்கு பெரும்பாடு பட்டார்.
“நானும் முதல்முறையா இங்கே வர்றேன்.. எனக்கெல்லாம் யாரும் ஆரத்தி எடுக்க மாட்டீங்களா?” என்ற குரலில் எல்லாரும் ஆர்வத்துடன் திரும்பிப் பார்க்க அங்கே தலையை சாய்த்து குறும்பு புன்னகையுடன் அஞ்சலி நின்று கொண்டிருந்தாள்.
“வாம்மா… உனக்கு ஆரத்தி எடுக்காமலா?” என்றவர் சிரித்தவாறே அவளுக்கும் சேர்த்தும் ஆரத்தி எடுக்க… அதைப் பார்த்த துரைசாமிக்கு நெஞ்செல்லாம் எரிந்தது. அஞ்சலியை பார்த்த பிறகு அங்கே நிற்கவும் பிடிக்காமல் அவர் வேகமாக உள்ளே செல்ல… அவரின் நடையின் வேகத்தில் இருந்தே அவரது கோபத்தை உணர்ந்து கொண்ட அஞ்சலி மர்மமாய் புன்னகைத்தாள்.
‘அண்ணன் கல்யாணத்தப்போ நிறைய வேலை இருந்தது. அதுதான் உங்களை சரியா கவனிக்க முடியல.. அதுக்காகத் தான் இப்போ வந்து இருக்கேன்.’ என்று எண்ணியவள் அதே நினைவுடன் பார்வையை திருப்ப… அங்கே சத்யன் அவளையே பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான். சத்யனின் பார்வை தன்னை ஆராய்வதை உணர்ந்ததும் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு அண்ணனின் தோளில் தொற்றிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அஞ்சலி.
பாலும்,பழமும் கொடுத்தவுடன் தம்பதிகள் இருவரும் சஹானாவின் அறைக்கு செல்ல… சத்யன் அஞ்சலியை அழைத்துக் கொண்டு விருந்தினர் அறைக்கு சென்றான். அவளது பெட்டியை கட்டிலில் வைத்தவன் அவளின் முகம் பார்த்து தீர்க்கமாக பேசத் தொடங்கினான்.
“இங்கே உங்களுக்கு ஏதாவது தேவையா இருந்தா அம்மா கிட்டயோ… இல்ல என்கிட்டயோ சொல்லுங்க..உடனே ஏற்பாடு செஞ்சு தர்றேன். சஹானாவின் கல்யாண சமயத்தில் நீங்க நிறைய உதவி செஞ்சு இருக்கீங்க…எங்களுக்கும் அப்போ அவளோட விருப்பத்தை நிறைவேத்தி வைக்கிறது மட்டும் தான் முக்கியமா இருந்துச்சு..அதனால நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் செஞ்சோம்”
‘இப்போ எதுக்கு இப்படி பேசித் தள்ளுறார்…’
“இப்போ எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சுடுச்சு… ஸோ இனிமே பழசு எல்லாத்தையும் மறந்துட்டு எல்லார்கிட்டயும் நல்ல மாதிரியா பழகணும்…குறிப்பா எங்கப்பா கிட்டே…”
‘எலி எதுக்குடா அம்மணமா ஓடுதுன்னு நினைச்சேன்… இதுதான் விஷயமா… வந்து இருக்கிறதே உங்க அப்பாவை கதற வைக்கத் தான்..அதை செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி ராஜா’ என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியே முகத்தை நல்ல பிள்ளையாக வைத்துக் கொண்டாள்.
“சொன்னது புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்….கவனமா நடந்துக்கோங்க” என்று எச்சரிப்பது போல சொன்னவன் மாடியை விட்டு கீழே இறங்க… அஞ்சலி தங்கி இருந்த அறையில் இருந்து சத்தமாக பாட்டு ஒலிக்கத் தொடங்கியது.
கும்முறு
டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு
கும்மறு
கும்மாறா
காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு
கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்த சத்யன் அப்படியே நின்று விட்டான் அந்த பாடலில்.
‘இவளை’ அவன் பற்களை கடித்த சத்தம் அறையில் இருந்த அஞ்சலியின் காதுகளை எட்டி அவளை குத்தாட்டம் போட வைத்தது.
“சப்போர்ட்டா செய்ற உங்க அப்பனுக்கு… இருடி உனக்கும் சேர்த்து தலைவலி வர வைக்கிறேன்” என்றாள் புன்னகை மாறா முகத்துடன்.
ஆட்டம் தொடரும்.
Nice update