
பெரிதாக யாரிடமும் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அமைதியாகவே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் அக்னிபுத்திரன். இரவு உணவுக்கு சாப்பிடும் பொழுது கூட எதிரில் நின்று அவனுக்கு பரிமாறிய அருந்ததியின் பக்கம் அனாவசியமாகக் கூட அவன் பார்வை திரும்பவில்லை.
சிவநேசனுக்கோ மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி…
கண்டிஷன் எல்லாம் போட்டு அன்று அத்தனை விறைப்பாக பேசினாலும் இன்று இத்தனை அமைதியாக இருக்கிறாரே… அன்று அவர் சொன்னது போல உண்மையிலேயே ஒரு போலீசை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெகுநாட்களாக மனதுக்குள் ஆசையை வளர்த்து இருப்பார்.
எங்கே அது நடக்காமல் போய் விடுமோ என்ற மிதமிஞ்சிய பயம் ஏற்பட்டு விட்டது போலும். அதன் வெளிப்பாடு தான் அன்றைய பேச்சும், கோபமும்.. செய்கையும்… என்று எண்ணி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார்.
தந்தையின் மகிழ்ச்சியில் துளியளவு கூட அருந்ததியிடம் இல்லை. அவள் அன்றைக்கு பேசிய பேச்சிற்கு அவனிடம் அவள் எதிர்பார்த்தது மித மிஞ்சிய ஆத்திரத்தைத் தான். அப்படி இருக்கும் பொழுது இந்த அமைதி?
‘ம்ஹும்… எலி எதுக்கு அம்மணமா ஓடுது? அருந்ததி… என்னவோ சரியில்லை.. உஷார்..’ என்று அவளது மூளை அவளுக்கு அபாயமணி அடிக்கவும் தவறவில்லை.
வந்ததில் இருந்தே அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்பாமல் அவன் நடந்து கொண்ட விதம் அவளது சந்தேகத்தை அதிகமாக்கியது. மகளைப் பற்றி சிவநேசன் பெருமையாக பேசும் பொழுது மட்டும் அவன் கைகள் இறுகுவதையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்திரத்தில் அவன் மூக்கு நுனி துடிப்பதையும் அவளால் நன்றாகவே பார்க்க முடிந்தது. அது எதையும் சிவநேசன் கண்டு கொள்ளக் கூடாது என்று அவருக்கு நேராக அமராமல் பக்கவாட்டில் அவன் அமர்ந்து இருக்க… அந்த பக்கவாட்டுத் தோற்றம் அருந்ததிக்கு தெளிவாக எல்லாவற்றையும் புரிய வைத்தது எனலாம்.
‘எதுவா இருந்தாலும் சமாளிச்சுத் தான் ஆகணும்.. அன்னைக்கு போனில் கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ… அதனால என்ன? நான் ஒண்ணும் சும்மா இருந்தவரை சீண்டி விடலயே… என்னை அப்படி மோசமா நடத்தினவரை அந்த அளவுக்குக் கூட நான் பேசலைனா அப்புறம் நான் என்ன கொஞ்சமும் மான ரோஷம் இல்லாதவளா? எனக்கு அவர் செஞ்ச அநியாயத்திற்கு எப்படி சும்மா விட முடியும்?’ தனக்குள்ளாகவே விவாதங்கள் நடத்திக் கொண்டாள் அருந்ததி.
சாப்பிட்டு முடித்ததும் அறைக்குள் சென்று முடங்காமல் ஹாலில் இருந்த சோபாவில் அப்பாவுடன் பேசிக் கொண்டே அமர்ந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கோகிலாவுடன் சாப்பிட அமர்ந்தாள் அருந்ததி.
அதுநேரம் வரை பேசிக் கொண்டே இருந்தவன் அவள் சாப்பிட அமர்ந்ததும் அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையில் என்ன இருந்தது?
‘அய்யயோ என்னமோ ஆப்பு ரெடி பண்ணிட்டான் போலவே… முழியே சரியில்லை’
I think athikama Sapda kudathu nu sola poren crt ahhhhh????….
Diet food ??