வீடெங்கும் இறைந்து கிடக்கின்றன
அவனின் கைவரிசையால்…
சில சமையல் பாத்திரங்கள்,
சில விளையாட்டு பொருட்கள்,
சில துவைத்த துணிகள்..
உடன் அழுக்குகள் சிலவும் …. !!
சமையலறை போர்க்களமாய்…
அவன் கைங்கரியத்தில்…
சிற்சில நீர்த் தேக்கங்கள்..
வாரி இறைத்த காய்கறிகள்..
சிதறிய அரிசி பருப்பு வகையறாக்கள்..
கோலம் போட்டதை கலைத்தது போல..
மஞ்சளுடன் மாவுக் கலவைகள்..
எறும்புகளிடம் பரிவு கொண்டதால்…
அறைக்கு அறை உணவுச் சிதறல்கள்..
எறும்புகளுக்கு போட்டியாகவே..
எங்கெங்கும் ஓடித் திரிகிறான் சுறுசுறுப்பாய்…
பார்ப்போரையெல்லாம் வசியம் செய்கிறான்..
அவன் மோனப் புன்னகையால்….
காணும் கண்களையெல்லாம்
கவர்ந்திழுக்கிறான் அவன் துறுதுறுப்பால்..
கேட்கும் காதுகளை இனிக்கச் செய்கிறான்..
அவன் அமுத மொழியால்…
பேசும் வாய்களில் கவிதையாகிறான்…
அவன் குறும்புத் தனத்தால்…
பணிச்சுமை மூச்சடைக்க…
இவன் கைவண்ணத்தால் நொந்துபோய்..
சினம் சீறியெழ கோபம் கொள்ளும்..
தாயவளை தாவியணைக்கிறான்….
வன்மம் மறைய… அன்பு பெருக…
கட்டியணைக்கிறாள் தன் ….
பிள்ளைக்கனியமுதை ….
கோபமறியா தாபமறியா வஞ்சனை செய்யா
குட்டி தெய்வமவன் …
வெற்றி கொள்கிறான்…
தன் கபடறியா அன்பினால்….
வய்யத்து வாழ்வோரெல்லாம்
குழந்தையாகவே…
அன்பு செய்திட்டால்…..
துன்பமென்பது எங்குமில்லை..
அவன் குறும்பைப் போலே
ரசித்து வாழலாம் ….
என்றும் சேர்ந்து வாழலாம் .