ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, அளவுக்கு அதிகமான சொத்துக்களோ தேவை இல்லை.
உண்பதற்கு காய்கறி உணவு,குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், படுப்பதற்கு தன் கைகளே தலையணை, ஆரோக்கியமான உடல்நிலை.இத்தகைய வாழ்க்கையிலும் ஒருவன் ஆனந்தமாக இருக்கலாம்.
லண்டனிலுள்ள ஒரு மனநல மருத்துவரின் கிளினிக். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. அவரை அங்கு பணிபுரிந்த துப்புரவு பணியாளர் மேரி என்பவர் ஒரு புன்முறுவலோடு அவரை வரவேற்றார்.
மருத்துவர் வருவதற்கு காலதாமதமானதால் அந்த துப்புரவு பணியாளர் மேரி அவர்கள்,அந்த பெண் மணியைப் பார்த்து,
”அம்மா,தாங்கள் என்ன காரணத்திற்க்காக மருத்துவரை பார்க்க வந்து இருக்கிறீர்கள் என்று வினவினார்..
அதற்கு அந்த பெண்மணி,
”என் மொத்த வாழ்க்கையுமே வெறுமையாத் தெரியுது. இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லைங்கிற எண்ணம் தினமும் என்னைப் பாடாகப் படுத்துது..ஒரே மனஉளைச்சல்.. அதற்காக அவரை பார்க்க வந்து இருக்கிறேன் என்றார்..
பிறகு அந்த துப்புரவு பணியாளரை பார்த்து நீங்கள் இந்த மருத்துவ மனையில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறீர்கள்? என்றார்..
அதற்கு அந்த துப்புரவு பணியாளர் தன் கதையே சொல்ல ஆரம்பித்தார்..
“மூணு மாசத்துக்கு முன்னாடி என் கணவர் மலேரியா ஜுரம் வந்து இறந்துபோயிட்டார். அதுக்கும் மூணு மாசத்துக்கு முன்னாடி என் ஒரே மகன் ஒரு விபத்துல இறந்து போயிட்டான்.
வாழ்றதுல ஒரு அர்த்தமும் இல்லை; வாழ்க்கையில பிடிப்பே இல்லாமப் போயிடுச்சு. என் கணவர் போனதுக்கப்புறம் என்னால சரியா சாப்பிட முடியலை, தூங்க முடியலை.
என் முகத்துலருந்து சிரிப்பு காணாமப் போயிடுச்சு. சமயத்துல செத்துப் போயிடலாமானுகூட தோண ஆரம்பிச்சிடுச்சு.
அந்த நேரத்துலதான் அது நடந்தது. ஒருநாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். பாதி தொலைவு வந்தப்புறம் திரும்பிப் பார்த்தேன். ஒரு பூனைக்குட்டி பின்னாலேயே நடந்து வந்துக்கிட்டு இருக்குறது தெரிஞ்சுது.
நான் அதை கவனிக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் தூரம் போனதுக்கு அப்புறம் பார்த்தா, மறுபடியும் அந்தப் பூனைக்குட்டி பின்னாடியே வந்துக்கிட்டு இருந்துச்சு.
அது ரொம்ப களைச்சுப் போயிருந்துச்சு. வெளியில குளிர் வேற ரொம்ப அதிகமா இருந்துதா… அது லேசா நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. சரி அதை வீட்டுக்குத் தூக்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணினேன்.
வீட்டுக்கு வந்து ஒரு பிளேட்ல கொஞ்சம் பாலை ஊத்தினேன். அவ்வளவுதான் அந்தப் பூனைக்குட்டி வேக வேகமா மொத்தப் பாலையும் நக்கிக் குடிச்சிடுச்சு.
அப்புறம் லேசா முறைச்சுப் பார்க்குற மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டே என் கால்கிட்ட வந்து உரசுற மாதிரி நின்னுச்சு. வாலை லேசா காத்துல வீசுற மாதிரி அசைச்சுக்கிட்டே என்னைப் பார்த்தது.
பசி தீர்ந்த அதோட திருப்தி எனக்கு நல்லாத் தெரிஞ்சுது. ரொம்ப நாள் கழிச்சு அன்னிக்கித்தான் என் முகத்துல சிரிப்பு வந்தது.
அதுக்கப்புறம் நான் யோசிச்சேன்..`ஒரு பூனைக் குட்டிக்கு உதவி செஞ்சாலே நமக்கு மகிழ்ச்சியும் சிரிப்பும் வருதே… மத்தவங்களுக்கு நம்மால ஆன உதவிகளைச் செஞ்சா எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும்.’ அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.
இன்னிக்கி என்னைவிட நல்லா சாப்பிடுற, நிம்மதியாத் தூங்குற,மகிழ்ச்சியா வாழுற யாருமே கிடையாதுனுதான் நான் நினைக்கிறேன்.
நான் மத்தவங்களுக்கு உதவி செய்யறதின் மூலமா என் மகிழ்ச்சியைக்கண்டு பிடிச்சேன்.’’ என்று மேரி சொல்லி முடித்தார்.
அந்த பணக்காரப் பெண்மணிக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவருக்குத் தன் வாழ்க்கை ஏன் வெறுமையாகவும், அர்த்தமில்லாததாகவும் இருக்கிறது என்பதும் புரிந்தது.
ஆம்.,நண்பர்களே.,
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, பொருளோ தேவையில்லை.
உண்மையில் மன நிம்மதியோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிது.
நேரத்தை ஒதுக்கி, பிடித்தவற்றைச் செய்ய முயற்சி செய்யுங்கள். மன உளைச்சலின்றி வாழலாம்!