காதலை தேடி… – 19

0
245

ஹாய் நட்பூஸ்….

காதலைதேடி…. அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்… படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க….

கடந்த எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி!!! நன்றி!!

காதலை தேடி… – 19

வினோத்தின் தேர்வு முடிவு அவன் எதிர்பார்த்தபடியே வெற்றி அடைந்தான். அடுத்த கட்ட தேர்விற்கு அவன் படித்து கொண்டிருக்க, காவ்யா எந்த தொந்தரவும் கொடுக்காமல் அவனது படிப்பிற்கு தேவையான உதவியும் செய்து கொண்டிருந்தாள். இருவரும் ஒன்றாக செலவிடும் நேரம் மிகவும் குறைவு என்பதை இருவரும் பொருட்படுத்தவில்லை. முதலில் வினோத் தன் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதில் காவ்யா உறுதியாக இருந்ததால் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது.

மதுராவும், அருளும் வாரத்திற்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். இருவரது வேலை காரணமாக இருவரும் நேரில் சந்திக்கும் நேரம் மிகவும் குறைவு. ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக நள்ளிரவை தாண்டியும் இருவரும் கைபேசியில் மெசேஜ் செய்து கொண்டிருந்தனர்.

தோழிகள் மூவரும் தங்களுடைய காதலை வளர்ப்பதில் தீவிரமாக இருக்க, ஒருவருடம் எப்படி போனதே தெரியவில்லை. இந்த ஒருவரிடத்தில் கிருஷ்ணாவிற்கு தீவிரமாக வரன் பார்த்து கொண்டிருந்தனர். இதுவரை எந்த வரனும் சரியாக அமையவில்லை.


இன்று ருத்ரா அலுவலகத்திற்கு சீக்கிரம் வந்திருந்தாள். அவளது கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருக்க கன்னங்கள் இரண்டும் வீங்கியிருந்தது. தன் இருக்கைக்கு வந்தவள் கைக்கடிகாரத்தை பார்க்க மணி ஏழு என காட்டியது. நேற்று இரவு நடந்தது படமாய் அவள் கண் முன் விரிந்தது.

நேற்றிரவு ருத்ராவின் தாய் பார்வதியும், தந்தை சிவநேசனும் அவளிடம் ஒரு புகைப்படத்தை கொடுத்து பார்க்க சொன்னார்.

“ருத்ரா, இந்த பையன் ஆஸ்திரேலியால இருக்கானாம். நல்ல சம்பளம், நல்ல குணமும் கூட. உங்க அப்பாவோட நண்பருக்கு தெரிஞ்ச பையனாம். உனக்கு பையன பிடிச்சிருக்கா பாரு. உனக்கு சம்மதம்னா பையனோட அப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்” – பார்வதி

புகைப்படத்தை வாங்கியவள் அதை பிரிக்காமல் மேஜை மேல் வைத்தாள். “அப்பா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பா. அதுவும் இல்லாமா உங்களை தனியா விட்டுட்டு அவ்ளோ தூரம் போய் என்னால இருக்க முடியாது பா”.

“ம்ம்ம்.. நீ சொல்றதும் சரி தான். எனக்கும் அவ்ளோ தூரத்துல உன்னை அனுப்ப இஷ்டமில்லை. உங்க அம்மா தான் நல்ல பையன், நல்ல குடும்பம் பேசிப்பாக்கலாம்னு சொன்னா. சரி மா அப்போ இன்னொரு ஒரு மாப்பிளை சென்னைல இருக்காங்க. அவங்கள இந்த வாரம் பொண்ணு பார்க்க வரசொல்லட்டுமா?”

“அப்பா, இப்போ என்ன அவசரம் கல்யாணத்துக்கு? இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே..”

“என்னங்க இவ இப்படியே தான் சொல்லிட்டு இருப்பா. நீங்க அந்த மாப்பிளை வீட்ல வரச்சொல்லிடுங்க”.

“மா… பிளீஸ் மா. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்…”

“ருத்ரா… மாப்பிளை வந்து பார்த்த உடனேவா கல்யாணம் பண்ணப்போறோம்? இரண்டு பேருக்கும் பிடிக்கணும், அவங்க வீட்ல பிடிக்கனும், இன்னும் எவ்வளவோ இருக்கு.. நீங்க வரச்சொல்லி போன் பண்ணுங்க…”

சிவநேசன் தன் கைபேசியை எடுக்க, ருத்ரா அவசரமாக “அப்பா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”.

“இருமா… மாப்பிளை வீட்டுக்கு வரச்சொல்லி தகவல் சொல்லிடுறேன். அப்புறம் பேசலாம்..”

“இல்லப்பா.. கல்யாண விஷயமா தான் பேசணும்.. அவங்களுக்கு போன் செய்ய வேண்டாம்…”

“சொல்லு ருத்ரா.. என்ன விஷயம்?”

“அப்பா… அது வந்து…”

“சீக்கிரம் சொல்லுமா… எங்ககிட்ட சொல்ல என்ன தயக்கம் உனக்கு?”

தன் தைரியத்தை திரட்டி கொண்டு ஒருவழியாக தன் பெற்றோரிடம் சொல்ல ஆரம்பித்தாள். “அது என்னோட வேலை பார்க்குற தீபக்கை நான் காதலிக்கிறேன் பா….”

தன் மகளிடம் இதை எதிர்பார்க்காத சிவநேசன், பார்வதிக்கு அதை கேட்டவுடன் கோபம் தலைக்கேற பார்வதி, ருத்ராவின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டார். அவர் அடித்ததில் தன் கன்னங்களை பிடித்து கொண்டு நின்றுவிட்டாள்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ? ஒரு பையன காதலிக்கறன்னு எவ்ளோ தைரியமா சொல்ற? இந்த விஷயம் கேள்வி பட்டா நம்ம சொந்தக்காரங்க முகத்துல எப்படி முழிக்கிறது? வேற இனத்துல கல்யாணம் பண்ணா நம்மள யாரு மதிப்பா?”

ஒரே பொண்ணுன்னு உனக்கு நாங்க அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்துட்டோம்.

“அம்மா… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… நீங்க தீபக்கிடம் பேசி பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்..”

“சரி.. எங்களுக்கு பிடிக்கலைன்னா நீ அந்த பையன கல்யாணம் பண்ணிக்கமாட்டியா?”

“உங்களுக்கு பிடிக்கலைன்னா நிச்சயம் நான் தீபக்கை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… ஆனா அவனை தவிர இந்த ஜென்மத்தில் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…”

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எங்க கிட்டயே எதிர்த்து பேசுவ? அப்போ எங்களை விட உனக்கு அவன் தான் முக்கியமா போய்ட்டானா?”

“அம்மா… எனக்கு நீங்க தான் முக்கியம்.. அதனால தான் உங்களுக்கு பிடிக்கலைன்னா அவனை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னேன்… அதே மாதிரி அவனை விட்டு வேறுயாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..”

“பாருங்க… இவளுக்கு நாம ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா இவ எப்படி பேசுறா பாருங்க… இவ இவ்ளோ பேசிட்டு இருக்கா.. நீங்க அமைதியா இருக்கீங்க?”

“பார்வதி, நீ உள்ள போ.. இந்த விஷயத்தை பத்தி யாரும் மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்…” என சிவநேசன் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இரவு முழுவதும் அழுதவள் தன் கைபேசியை தேட அது எங்கே என அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் தாயிடமும் கேட்க துணிவின்றி விடியலுக்காக காத்து இருந்தவள் விடிந்ததும் குளித்து முடித்துவிட்டு அலுவலகத்திற்கு செல்ல தயாராகினாள். அவள் கிளம்புவதை பார்த்து கொண்டிருந்த பார்வதி, “இனிமே நீ ஆபிஸ்க்கு போகவேண்டாம்… வீட்லயே இரு…”

அவர் சொல்வதை காதில் வாங்காதவள் தன் வண்டியை எடுத்து கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

ஒவ்வொருவராக அலுவலகம் வர, தீபக் ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தான். ருத்ராவை கண்டவுடன் ஏதோ விபரீதம் என புரிந்து கொண்டவன் அவளை பக்கத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு வருமாறு கூறிவிட்டு முன்னே சென்றான். கடைக்கு சென்றவுடன் ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்தவன், அவளிடம் என்னவென்று விசாரிக்க, அவள் இரவு நடந்தது அனைத்தையும் அழுகையுடன் கூறி முடித்தாள்.

“எனக்கு பயமா இருக்கு தீபக்..”

“ஏய் ருத்ரா.. எதுக்கு பயப்படுற? எதுவும் நடக்காது… நான் இருக்கேன்..”

“எங்க வீட்ல இனிமே அலுவலகத்துக்கு போகவேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க.. இன்னைக்கே நான் உன்னை பார்த்து விஷயத்தை சொல்லிடணும்னு தான் வந்தேன்..”

“சரி சரி… ஒன்னும் நடக்காது.. நான் பார்த்துக்கறேன்…” என தைரியம் கூறினாலும் மேற்கொண்டு என்ன செய்வதென்று அவனிற்கும் தெரியவில்லை.

மதியம் உணவு இடைவெளியில் ருத்ராவின் கன்னம் வீங்கியிருப்பதை பார்த்த தோழிகள் என்னவாயிற்று என பதற அவர்களிடமும் நடந்ததை கூறினாள். தோழிகள் மூவரும் அவளிற்கு ஆறுதல் கூறி தைரியமாக இருக்க சொல்ல அனைத்திற்கும் தலையாட்டினாள்.

அன்று தான் அவளை அனைவரும் கடைசியாக பார்த்தனர். அடுத்து வந்த நாட்களில் எவ்வளவோ முயன்றும் அவர்களால் ருத்ராவை அணுகமுடியவில்லை.

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here